மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வி அடைந்தது. 197 ரன்கள் பெரிய இலக்கை 15.3 ஓவர்களில் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி எட்டியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகளை அடைந்து மோசமான நிலைக்கு சென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. ஃபாப் டுப்லேசிஸ் 61, ரஜத் படிதார் 50 மற்றும் தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் குவித்து இருந்தனர். விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி இருந்தார்.

அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 34 பந்துகளில் 71 ரன்களும், ரோஹித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களும் குவித்தனர். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி இமாலய வெற்றியை பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கில் ஓரளவு நன்றாக செயல்பட்ட போதும் பவுலிங்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் சொதப்பியது. மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பேட்டிங்கில் மரண அடி அடித்த போது எந்த திட்டமும் இல்லாமல் பெங்களூரு அணி வீரர்கள் தலை குனிந்து நின்று கொண்டிருந்தனர். மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று தோல்விப் பாதையில் இருந்து மீண்டு இருக்கிறது.