மும்பை : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டார் சூர்யகுமார் யாதவ். பல மாதங்களுக்கு பின் களத்துக்கு திரும்பிய அவர் கடந்த போட்டியில் டக் அவுட் ஆனார்.
இந்த நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் காயத்துக்கு பின் மீண்டு வந்திருந்தாலும் அதே பழைய ஃபார்மில் இருப்பதை நிரூபித்தார். அதிலும் வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 197 ரன்கள் என்ற இமாலய இலக்கை 16வது ஓவரிலேயே எட்டி பெரிய வெற்றியை பெற்றது.
இஷான் கிஷன் 34 பந்துகளில் 71 ரன்களும், ரோஹித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களும் குவித்தனர். இவர்கள் ஆட்டத்தை எல்லாம் தூக்கி அடித்த சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் அவர். 5 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவின் அதிவேக அரைசதம் இதுவே ஆகும். அவர் ஒவ்வொரு பவுண்டரியாக அடிக்க, அடிக்க மும்பை அணியின் ரசிகர்கள் "சூர்யா, சூர்யா" என கோஷம் எழுப்பினர்.
பின்னர் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி இமாலய வெற்றியை பெற்றது. 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் மூன்று போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி இருந்தார். தற்போது அவர் முழு ஃபார்முக்கு திரும்பி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி உற்சாகத்தில் உள்ளது.