மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி வெறும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உலகின் நம்பர் 1 வேக பந்துவீச்சாளரான பும்ராவின் பந்துவீச்சில் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்தார் கோலி.
2024 ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள பெங்களூரு அணியும், நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள மும்பை அணியும் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணிக்கு விராட் கோலி - ஃபாப் டுபிலேசிஸ் துவக்கம் அளித்தனர். முதல் இரண்டு ஓவர்களில் விராட் கோலி 6 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரால் பிட்ச்சை கணித்து ஆடவில்லை. சரியாக அந்த நேரத்தில் மூன்றாவது ஓவரை வீச வந்தார் பும்ரா. அவரது பந்துவீச்சில் முதல் இரண்டு பந்துகளை சரியாக ஆட முடியாமல் திணறிய விராட் கோலி, மூன்றாவது பந்தில் இன்சைட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணியில் கடந்த ஐந்து போட்டிகளில் அதிக ரன் குவித்தது விராட் கோலி தான். மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் யாருமே நிலைத்து நின்று ரன் குவிக்கவில்லை. இந்த நிலையில் முக்கிய விக்கெட்டான விராட் கோலி வெளியேறியதை கண்டு பெங்களூரு ரசிகர்கள் உறைந்து போனார்கள்.
எனினும், விராட் கோலி சென்ற பின் ரஜத் படிதார் மற்றும் டு பிலேசிஸ் அதிரடி ஆட்டம் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடந்த போட்டிகளில் படுமோசமாக ஆடி வந்த ரஜத் படிதார், இந்தப் போட்டியில் 25 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்தார்.