மும்பை : மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்க்க கூடாது என்று ஆர்சிபி வீரர் விராட் கோலி வான்கடே ரசிகர்களிடம் சிக்னல் காட்டிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அந்த அணியின் ரசிகர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வருகின்றனர். 5 முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிய மும்பை அணி நிர்வாகத்திற்கு ரசிகர்களின் எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது.

அகமதாபாத் மைதானத்திலேயே ரசிகர்களின் எதிர்ப்பை சந்தித்த ஹர்திக் பாண்டியா, அதன்பின் ஐதராபாத், மும்பை உள்ளிட்ட மைதானங்களிலும் ரசிகர்களால் தொடர்ந்து விளாசப்பட்டு வருகிறார். மைதானத்திற்கு வரும் 80 சதவிதத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ரோகித் சர்மாவின் ஜெர்சியை அணிந்து வருவதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணி திணறி வருகிறது.
இந்திய மண்ணிலேயே இந்திய வீரருக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு வருவது இதுவே முதல்முறையாகும். இதனிடையே கடந்த போட்டியிலேயே மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரி லைனில் இருந்த போது, ரசிகர்கள்கோஷம் எழுப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் ரசிகர்கள் இதுவரை ஹர்திக் எதிர்ப்பை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த போது, ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அப்போது மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு கோஷத்தை தொடங்கினர். இதனை பார்த்த விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவும் இந்திய வீரர் தான். எதிர்ப்பை கைவிடுங்கள் என்று ரசிகர்களுக்கு சிகன்ல் கொடுத்தார்.
விராட் கோலியின் இந்த செயல் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித், ஆஃப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் ஆகியோரை ரசிகர்கள் கிண்டல் செய்த போது, சக வீரருக்கு ஆதரவாக விராட் கோலி ரசிகர்களிடையே சிக்னல் செய்தது குறிப்பிடத்தக்கது.