மும்பை : மும்பை அணியுடனான போட்டியில் அடைந்த மெகா தோல்விக்கு பின் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை சேர்த்தார். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி 5வது தோல்வியை பெற்றுள்ளது.

இந்த தோல்வி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், இந்த தோல்வியை ஏற்கவே முடியவில்லை. இந்த தோல்விக்கு இரு காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன். முதலில் அதிகளவிலான பனிப்பொழிவு மற்றும் டாஸை நான் வென்றிருக்க வேண்டும். இரண்டாவது மும்பை அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. எங்களை அழுத்தத்திலேயே வைத்திருந்தார்கள். அதேபோல் நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம். 2வது பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.
அதனால் 250 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் 196 ரன்கள் மிகவும் குறைவானது என்ரு மும்பை அணியினர் நிரூபித்துவிட்டார்கள். ஈரப்பதம் இருக்கும் என்று அறிந்திருக்கும்சூழலில், நிச்சயம் பெரிய இலக்கை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால் பந்து மிகவும் மோசமாகியது. ஈரப்பதம் காரணமாக பந்தையே சில முறை மாற்ற வேண்டியதாக இருந்தது. சில முக்கிய தருணங்களை பயன்படுத்த நாங்கள் தவறிவிட்டோம்.
நானும் பட்டிதர் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த போது, மும்பை அணி சரியான கம்பேக் கொடுத்தது. ஜஸ்பிரித் பும்ரா கைகளில் எப்போதெல்லாம் பந்து கொடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் நிச்சயம் பேட்ஸ்மேன்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அவரிடம் அதிகளவிலான திறமை உள்ளது. அழுத்தமான நேரங்களில் சிறப்பாக பவுலிங் செய்கிறார். ஒரே ஆக்ஷனில் பல விதமாக பவுலிங் செய்கிறார்.
லசித் மலிங்காவிற்கு கீழ் இன்னும் கூர்மையாகி கொண்டே போகிறார். பும்ரா எங்கள் அணியில் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். நாங்கள் அடுத்தடுத்த போட்டியில் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய வழிகளை ஆராய வேண்டும். எங்களின் பவுலிங் பலம் வாய்ந்தது கிடையாது. அதனால் எப்படியோ சமாளிக்க வேண்டும். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்ய தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.