மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியை பொறுத்தவரை 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, ஒரு வெற்றியுடன் 9வது இடத்தில் உள்ளது.

ஏற்கனவே மும்பை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், வான்கடே மைதானத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள வான்கடே மைதானத்தில் வலுவான பேட்டிங் லைன் அப்பை வைத்துள்ள மும்பை அணியை வீழ்த்துவது எளிதாக இருக்காது. இருப்பினும் 2020 முதல் மும்பை அணிக்கு எதிராக ஆடிய 7 போட்டிகளில் ஆர்சிபி அணி 5 போட்டிகளில் வென்றுள்ளது.
இதனால் ஆர்சிபி அணி கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆர்சிபி அணியில் விராட் கோலியை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை. குறிப்பாக அதிரடி வீரர் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் மோசமாக விளையாடி வருகின்றனர். இதனால் இருவரில் ஒருவர் இந்த போட்டியில் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீனுக்கு பதிலாக அதிரடி தொடக்க வீரர் வில் ஜாக்ஸை ஆர்சிபி அணி தேர்வு செய்யலாம் என்றும், அண்மையில் இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான ஆகாஷ் தீப் இருவரும் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மும்பை மைதானத்தில் ஸ்விங் இருக்கும் என்பதால் ஆகாஷ் தீப் முக்கிய ரோலில் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்தால், 5வது தோல்வியை பதிவு செய்யும். இதனால் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு கூடுதல் சிக்கல் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவு கொஞ்சம் பிரகாசமாகும். இதற்கு தேவையான திட்டங்களுடன் ஆர்சிபி அணி களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது.