மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்ததை அடுத்து, அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கி விடுவார்கள் எனக் கூறி ரோஹித் சர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருந்தது மும்பை இந்தியன்ஸ் னை நிர்வாகம். அவரால் கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தது அந்த அணி.

மேலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 2024 ஐபிஎல் தொடரில் அவராலும் அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியவில்லை. அவரது தலைமையில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது.
இதில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்களை விட்டுக் கொடுத்தது மும்பை. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டியது. இப்படி தொடர்ந்து மோசமாக சென்று கொண்டு இருக்கிறது மும்பை அணி. மறுபுறம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஆக்கியதை விரும்பாத ரோஹித் சர்மா ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விடுவார்கள் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பு குறைவு. இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது. இனி தொடர்ந்து வெற்றி பெற்றால் அந்த அணியின் நிலை மாறி விடும். மேலும், இப்போதே ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் அவருக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழும்.
ஒருவேளை 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது.