மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்படியாவது முதல் வெற்றியை பெற்றுத் தந்து விட வேண்டும் என ஹர்திக் பாண்டியா போராடிக் கொண்டு இருக்கும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் அந்த அணிக்கு எமனாக வர இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறது. மேலும், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை பறித்து, ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கியதில் அந்த அணியின் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். போட்டிகளின் போது ஹர்திக் பாண்டியாவை நோக்கி ரசிகர்கள் கடும் கோஷம் எழுப்பி அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் இந்த எதிர்ப்புக்களை ஓரளவு சமாளிக்க முடியும். அதே சமயம், ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கடந்த காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 9 இன்னிங்ஸ்களில் 485 ரன்கள் குவித்து இருக்கிறார் ஜோஸ் பட்லர். இதன் சராசரி 69 ஆகும். இதில் நான்கு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் கூட இது போல 9 இன்னிங்ஸ்களில் 485 ரன்கள் குவிப்பது கடினமான விஷயம் தான். ஆனால், ஜோஸ் பட்லர் டி20 போட்டியிலேயே இது போன்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஜோஸ் பட்லரை வீழ்த்த தனியாக திட்டம் வகுத்தால் மட்டுமே அவரை கட்டுப்படுத்தி இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியும். ஏற்கனவே, பல அழுத்தங்களை எதிர்கொண்டு இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலியாக வந்திருக்கிறார் ஜோஸ் பட்லர்.