மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த பின் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என நினைத்த அந்த அணியின் உரிமையாளர் அம்பானி குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று தோல்விகள் அடைந்தது மட்டுமின்றி அதில் இரண்டு மோசமான சாதனைகளை செய்துள்ளது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 277 ரன்கள் குவிக்க விட்டது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி குவித்த மிக அதிக ரன்கள் அதுதான். ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த அணியாக மோசமான சாதனையை செய்தது மும்பை இந்தியன்ஸ்.

இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தப் போட்டியில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை அணி. 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த 14 போட்டிகளில் இதுவே மிக குறைவான ஸ்கோர் ஆகும். ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் எல்லாம் இந்த இலக்கை எட்டி இந்தப் போட்டியில் எளிதாக வென்றது.
புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக ஸ்கோரை விட்டுக் கொடுத்ததோடு, தற்போது இந்த ஆண்டின் மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்துள்ளது. தங்கள் அணியை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டும் என்றே ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது அம்பானி குடும்பம்.
ஆனால், தற்போது ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் தடுமாறி வருவது தெளிவாக தெரிகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின்னர் ஆனந்த் அம்பானி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது மும்பை வான்கடே மைதானத்திலும் தோல்வி அடைந்து இருப்பதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமித்ததில் அம்பானி குடும்பம் நொந்து போயிருக்கும் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.