மும்பை : மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார்.
கடந்த 2009 முதல் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதிய இந்தப் போட்டி 200வது ஐபிஎல் போட்டி ஆகும். 200 ஐபிஎல் போட்டிகள் என்ற மைல்கல் சாதனையை தொட்ட 10வது வீரர் ஆவார் அஸ்வின். மேலும், இதே சாதனையை செய்த இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 245 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அவர் அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 253 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கிறார். ரோஹித் சர்மா 246 போட்டிகளில் பங்கேற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் ட்ரென்ட் பவுல்ட் பந்துவீச்சில் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினர். அதில் ரோஹித் சர்மாவும் ஒருவர். இதை அடுத்து பேட்டிங்கில் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.