மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற அழுத்தத்தில் இருக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதைக் கண்டு உறைந்து போனார்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தனது முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. மேலும், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால், அந்த அணியின் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் ஆடும் போட்டிகளின் போது ஹர்திக் பாண்டியாவை நோக்கி ரசிகர்கள் கடும் கோஷம் எழுப்பி அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் இந்த எதிர்ப்புக்களை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ்.

இந்த சூழலில் ரோஹித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அவருக்கு மேலும் கவலை அளிக்கும் வகையில் அடுத்து பேட்டிங் செய்ய வந்த நமன் திர், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோரும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வரிசையாக வெளியேறினர். மற்றொரு துவக்க வீரர் இஷான் கிஷன் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் மின்னல் வேகத்தில் ஸ்விங் பந்துகளை வீசி மூன்று வீரர்களையும் டக் அவுட் செய்தார். அதன் பின் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடி மும்பை இந்தியன்ஸ் அணியை காப்பாற்ற முயன்றனர். பாண்டியா 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.