மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ரசிகர்களிடம் மைதான ஊழியர்கள் கெடுபிடியோடு நடந்து கொண்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த இதுபோன்ற சில நிகழ்வுகள் வான்கடே மைதானத்தில் நடந்ததாக ஆதாரங்களை பரப்பி வருகிறார்கள் ரோஹித் ரசிகர்கள்.

ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக நியமித்ததை விரும்பாத ரோஹித் சர்மா ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும், ஹர்திக் பாண்டியாவை அருகில் காணும் போது "ரோஹித், ரோஹித்" என கோஷமிட்டு அவரை எரிச்சலூட்டி வருகின்றனர்.
இதனிடையே 2024 ஐபிஎல் தொடரில் தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்றாவதாக மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. சொந்த மைதானத்திலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஹர்திக் பாண்டியா.
அதே சமயம், வான்கடே மைதானத்திலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினால் சொந்த மைதானத்திலேயே ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இருப்பதாக கருதப்படும் என்பதால் ரோஹித் ரசிகர்களிடம் கெடுபிடி காட்டப்பட்டது.
சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் வீடியோக்களில் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக வாசகங்கள் மற்றும் பதாகை எடுத்து வந்தவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி கீழே வீசிய பின்னரே அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். அதே போல, மைதானத்தில் "ரோஹித், ரோஹித்" என்ற கோஷம் எழுந்த போதும் ஹர்திக் பாண்டியாவை மைதானத்தின் திரையில் காட்டிய போதெல்லாம் கோஷம் எழுப்பிய போதும் நேரலை ஒளிபரப்பில் பின்னணி இசையில் சத்தம் குறைக்கப்பட்டது.
மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாண்டியாவுக்கு எந்த அளவுக்கு அங்கே எதிர்ப்புக் குரல் எழுந்தது என்பதை வீடியோ எடுத்து பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வீடியோக்களில் இருந்த சத்தம் எதுவுமே நேரலையில் ஒலிபரப்பாகவில்லை.
இதன் மூலம், தொலைக்காட்சி மற்றும் மொபைலில் இந்தப் போட்டியை பார்த்தவர்களுக்கு ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இந்த காட்சிகளை ரோஹித் சர்மா ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.