மும்பை : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஷ் சாவ்லா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

இஷான் கிஷன் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்த நிலையில், முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். தொடக்கத்திலேயே ஒய்டு பவுண்டரி சென்றதால், மும்பை அணி கூடுதல் பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கியது. ஆனால் தொடக்க வீரர் இஷான் கிஷன் 9 ரன்களிலும், ரோகித் சர்மா 4 ரன்களிலும், நமன் திர் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் மும்பை அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா கூட்டணி இணைந்தது. கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரிலேயே அதிரடியை தொடங்கிய சூர்யகுமார் யாதவ், மும்பை அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இதனால் மும்பை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 52 ரன்களை சேர்த்தது. இதன்பின் யான்சன் வீசிய ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்ட நிலையில், ஆட்டத்தில் மும்பை அணியின் கைகள் ஓங்கியது.
அதன்பின் ஐதராபாத் அணியின் அனைத்து பவுலர்களையும் சூர்யகுமார் யாதவ் எளிதாக சமாளித்து சிக்சரும், பவுண்டரியுமாய் பொளந்து கட்டினார். சிறப்பாக ஆடிய அவர் 30 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். மறுமுனையில் நின்றிருந்த திலக் வர்மா சிறந்த கம்பெனியை கொடுக்க, மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் 119 ரன்களை குவித்தது.
தொடர்ந்து கம்மின்ஸ் வீசிய 17வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4, 4, 6 என்று அடிக்க, சூர்யகுமார் யாதவ் 96 ரன்களை எட்டினார். பின்னர் நடராஜன் வீசிய 18வது ஓவரின் 2வது பந்தில் சிக்சர் அடித்து சதத்தை விளாசியதோடு, மும்பை அணியையும் வெற்றிபெற வைத்தார். இதன் மூலமாக மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 6 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 102 ரன்களை விளாசினார்.