மும்பை : மும்பை அணியின் அன்சுல் கம்போஜ் வீசிய பந்தில் ட்ராவிஸ் ஹெட் போல்டாகி வெளியேறிய நிலையில், 3வது நடுவரால் நோ-பால் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். ஏற்கனவே மும்பை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், ஐதராபாத் அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் நுவான் துஷாரா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரை வீச அறிமுக வீரர் அன்சும் கம்போஜ் அழைக்கப்பட்டார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 14 ரன்கள் விளாசப்பட, 4வது ஓவரை பும்ரா வீசினார்.
அந்த ஓவரில் இரு பேட்ஸ்மேன்களும் கவனமாக விளையாடினர். இந்த நிலையில் 5வது ஓவரை வீச மீண்டும் அன்சுல் கம்போஜ் மீண்டும் அழைக்கப்பட்டார். இந்த ஓவரின் 2வது பந்தில் சிக்ஸ் விளாசிய ட்ராவிஸ் ஹெட், 5வது பந்தில் போல்டாகினார். இதனால் ட்ராவிஸ் ஹெட் சோகமாக நடந்து வெளியேற, மும்பை அணி வீரர்கள் அன்சுல் கம்போஜை பாராட்டினார்.
ஆனால் திடீரென 3வது நடுவர் நோ-பால் என்று எமர்ஜென்சி சத்தத்தை எழுப்பினார். இதனால் ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் அமைதியானது. இதன்பின் அடுத்த 2 பந்திலும் ட்ராவிஸ் ஹெட் பவுண்டரியை விளாசி கம்பேக்கை கொடுத்தார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ட்ராவிஸ் ஹெட் அடித்த பந்துகள் ஏராளமானவை எட்ஜாகி சென்றது.
அப்போது அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில், போல்டாகிய போதும் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 8வது ஓவரிலும் அன்சுல் கம்போஜ் பவுலிங்கில் ட்ராவிஸ் ஹெட் கொடுத்த கேட்சை துஷாரா கோட்டைவிட்டார்.