மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அஜித் அகார்கர் அறிவித்துள்ள 15 பேர் கொண்ட அணியில் சில வீரர்கள் நீக்கப்பட்டு இருப்பதும் சில வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நடப்பு சீசனில் மொத்தமாகவே 198 ரன்கள் தான் அடித்திருக்கிறார். மேலும் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகளையும் எக்னாமிக் 11 ரன்கள் என்ற அளவிலும் வைத்திருக்கிறார்.

இதனால் ஹர்திக் பாண்டியாவை ஏன் அணியில் சேர்த்து இருக்கிறீர்கள் என்று பலரும் கேள்வி கேட்டுள்ள நிலையில் அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய முகமது கைஃப், ஐசிசி தொடரில் ஹர்திக் பாண்டியா தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மேட்ச் வின்னராக திகழ்வதாக கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஐசிசி தொடர்களில் என்னை பொறுத்தவரை விராட் கோலி, சூரியகுமார் யாதவை விட ஹர்திக் பாண்டியா தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழ்கிறார். இந்தியா, பாகிஸ்தான் போட்டி எடுத்துப் பாருங்கள். மேலும் மெல்போர்னில் விராட் கோலி 82 ரன்கள் அடித்து இருந்தார்.
அப்போது ஹர்திக் பாண்டியா தான் களத்தில் நின்று முக்கிய பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆசியக் கோப்பையும் எடுத்துப் பாருங்கள். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
ஜடேஜாவும், தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழந்த நிலையில் பாண்டியா தான் தனியாளாக நின்று அணியை காப்பாற்றினார். ஐபிஎல் தொடர் என்பது வேறு, டி20 உலக கோப்பை என்பது வேறு, ஐபிஎல் தொடரில் உங்களுக்கு 14 லீக் ஆட்டங்கள் இருக்கும். நீங்கள் ஆரம்பத்தில் போட்டிகளில் தோற்றாலும் பிறகு உங்களால் கம்பேக் கொடுத்து கோப்பையை கூட வெல்ல முடியும்.ஆனால் உலக கோப்பையில் அப்படி கிடையாது.
முதலில் நீங்கள் பலவீனமான அணிகளை எதிர்கொள்வீர்கள். அதன் பிறகு நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் போது பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற பலமான அணிகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். உலக கோப்பையில் வெல்ல வேண்டும் என்றால் நீங்கள் இரண்டு முக்கியமான போட்டிகளில் விளையாடியே ஆகவேண்டும். என்னை கேட்டால் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி மிகவும் பேலன்ஸ் ஆக இருக்கிறது என்று முகமது கைஃப் கூறியுள்ளார்.