மும்பை : ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகும் முன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். 2022 ஐபிஎல் தொடரில் முதன்முறையாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
அப்போது "நான் தான் கேப்டன்" என்ற எண்ணத்தில் அந்த அணியில் இடம் பெற்று இருந்த மூத்த வீரரான முகமது ஷமியை களத்தில் திட்டினார். இதற்கு முன் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களின் கேப்டன்சியில் முகமது ஷமி ஆடி இருக்கிறார். அப்போது கூட யாரும் அவரை திட்டியதில்லை.

ஆனால், தன்னை விட அனுபவம் குறைந்த ஹர்திக் பாண்டியா தன்னை திட்டியதால் எரிச்சல் அடைந்த முகமது ஷமி, அந்தப் போட்டியின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திடம் "இது போல இனியும் நடக்கக் கூடாது" என கூறினார். அப்போது குஜராத் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவிடம் கவனமாக இருக்குமாறு கூறியது. அதன் பின்னர் அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்றாலும் கூட முகமது ஷமி அந்த சம்பவத்தை இரண்டு ஆண்டுகள் கழித்தும் மறக்கவில்லை என தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பாண்டியா அப்போது தன்னை திட்டியது குறித்து பொதுவெளியில் பேசி இருந்தார். அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டு விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்த போது, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த முகமது ஷமி, பாண்டியா செல்வதால் தங்கள் அணிக்கு எந்த இழப்பும் இல்லை எனக் கூறி அவரை குறைத்து மதிப்பிட்டு பேசி இருந்தார்.
அதைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடர்பான ஊடக விவாதங்களில் பங்கேற்று வரும் முகமது ஷமி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து பேசுகையில் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியா ஐந்தாம் வரிசையில் பேட்டிங் இறங்காமல் ஏழாம் வரிசையில் தான் பேட்டிங் இறங்கினார்.
அது குறித்து விமர்சித்த ஷமி, நான்கு அல்லது ஐந்தாம் வரிசையில் பேட்டிங் இறங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஏழாம் வரிசையில் இறங்கினால் பின்வரிசை வீரராகவே உங்களை கருத முடியும். ஹர்திக் பாண்டியா அந்த போட்டியில் முன்பே களமிறங்கி இருந்தால் போட்டி கடைசி ஓவர் வரை சென்று இருக்காது என்றார்.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டன்சியை பறித்து ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆனதால் அந்த அணிக்குள் வீரர்கள் இடையே புகைச்சல் எழுந்துள்ளது. மறுபுறம் அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் ஐபிஎல் அணியை விட்டு சென்றதில் அந்த மாநில ரசிகர்கள் அவர் மீது கோபமாக இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் ரோஹித் சர்மா ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்போது முகமது ஷமியும் பொது வெளியில் அவரைத் தாக்கிப் பேசத் தொடங்கி இருக்கிறார். தன் வினை தன்னைச் சுடும்.