விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பயிற்சியாளர் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் வென்ற சிஎஸ்கே அணி, வெளி மாநிலத்தில் விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது. அதேபோல் கேப்டனாகவும் ருதுராஜ் கெய்க்வாட் முதல் தோல்வியை சந்தித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் பிரச்சனையே இல்லை என்று பார்க்கப்பட்ட சூழலில், பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேப்டனான பின் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பிளெமிங் பேசுகையில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், தோனியின் பேட்டிங் எங்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைபை கொடுத்துள்ளது. அதிலும் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பின் முதல்முறையாக பேட்டிங் செய்ய களமிறங்கி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தோல்வியை பொறுத்தவரை களத்தில் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளை வெளிப்படையாக காட்டுகிறது.
நாங்கள் கொஞ்சம் மோசமான விளையாடினோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பவர் பிளேவில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்க முடியவில்லை. அதேபோல் பவுலிங்கிலும் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தோம். நாங்கள் பேட்டிங் செய்யும் போது, டெல்லி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்/ சரியாக பேட்ஸ்மேன்களை பிரஷர் செய்து, பிட்சின் உதவியையும் பயன்படுத்தி கொண்டார்கள். அதேபோல், வார்னர் மற்றும் பண்ட் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியால் நல்ல ஸ்கோரையும் எட்ட முடிந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் குறித்து எந்த கவலையும் கொள்ள தேவையில்லை. ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் ஏற்ற, இறக்கங்கள் இருப்பது சாதாரணம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அதனால் கவலை கொள்ளும் அளவிற்கு எந்த தேவையும் இல்லை. அதேபோல் இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கேப்டன்சியும் நன்றாக இருந்தது. கேப்டன்சியில் மாற்றம் வரும் போது, அணியை இயல்பாக கொண்டு செல்வது சாதாரணமில்லை. அதனை ருதுராஜ் சிறப்பாக செய்து வருகிறார்.
அதேபோல் அனைத்து முடிவுகளிலும் தோனியின் பங்கும் உள்ளது. அவரும் ஜடேஜாவும் களத்தில் ருதுராஜிற்கு உதவியாக இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு முன்பாக விளையாடிய 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வென்றது. சொந்த மண்ணில் இருந்து வெளியில் வந்து விளையாடும் போது என்ன மாதிரியான சவால் இருக்கும் என்பது தெரியும். இந்த போட்டியில் எங்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்தார்.