சென்னை : சிஎஸ்கே அணியில் விளையாடும் போது பிரஷரை எப்படி சமாளித்து விளையாடுகிறார் என்பதே முக்கியம் என்று தோனி கூறியதாக இளம் வீரர் சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் ரஷீத் கான் பவுலிங்கில் 2 சிக்சர்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் சமீர் ரிஸ்வி. 20 வயதாகும் இளம் வீரர் ஒருவர் உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் பவுலர் ஒருவரை முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது ஆச்சரியத்தை கொடுத்தது. இதனால் சமீர் ரிஸ்வி பற்றிய விவாதம் முன்னாள் வீரர்கள் மற்றும் சோசியல் மீடியாவில் அதிகரித்தது.

ஐபிஎல் ஏலத்தில் போது குஜராத் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுடன் போட்டி போட்டு 20 வயதேயான இளம் வீரர் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. அப்போதே பலருக்கும் யார் இந்த சமீர் ரிஸ்வி என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விகளுக்கு தனது அறிமுக போட்டியிலேயே சமீர் ரிஸ்வி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சமீர் ரிஸ்வி பேசுகையில், 19வது ஓவரை வீசுவதற்காக ரஷீத் கான் வந்த போதே, என் அருகில் பயிற்சியாளர் பிளமிங் வந்தார். அப்போது அவர், ஒருவேளை விக்கெட் இழந்தால், உடனடியாக நீ களமிறங்க வேண்டும் என்று கூறினார். அதனால் எனது மனநிலையை மொத்தமாக மாற்றிவிட்டேன். அட்டாக் செய்வதே எனது பணி என்று முடிவு செய்தே களமிறங்கினேன்.
சிஎஸ்கே அணி எனது ஆட்டத்தை பார்த்திருந்தால் நிச்சயம், நான் ஸ்பின்னர்களை விளையாடுவதையும் பார்த்திருப்பார்கள். அதேபோல் சிஎஸ்கே பயிற்சி முகாமில் ஸ்பின்னர்களை நன்றாகவே எதிர்கொண்டேன். சிறுவயது முதலே எனது மாமா தன்கீப் அக்தர் தான் என் பயிற்சியாளர். அவர் கோடை காலங்களில் சில விளையாட்டு முகாம்களை குழந்தைகளுக்கு நடத்துவார். அப்படிதான் என் வாழ்க்கையில் கிரிக்கெட் நுழைந்தது.
நானும் அவரின் கோடை கால விளையாட்டு முகாமில் கலந்து கொண்டேன். முதலில் டென்னில் பந்துகளில் தான் என் பயிற்சி இருக்கும். 30 யார்ட் வளையத்திற்குள் வெளியில் பந்து சென்றால், சிக்ஸ் என்று வைத்து விளையாடுவோம். சிறுவயதிலேயே அதிக சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்டேன். என் வாழ்க்கையில் யுபி டி20 லீக் தான் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. எனக்கு மட்டுமல்லாமல் பல இளைஞர்களுக்கு அந்த லீக் தொடர் உதவியாக உள்ளது.
சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதில் எந்த அழுத்தமும் இல்லை. முதல் போட்டியிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு முன் ஃபீல்டிங் செய்ய களமிறங்கியதால், 2வது போட்டியில் பேட்டிங் செய்யும் போது அழுத்தத்திற்கு பழகிக் கொண்டேன். தோனி என்னிடம் ஐபிஎல் ஏலத்தின் போது வாங்கப்பட்ட தொகையை மறந்துவிடு. இங்கு ஒவ்வொருவரும் ஒரு விலைக் கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். சிலருக்கு குறைவாகவும், சிலருக்கு அதிகமாகவும் இருக்கும். ஆனால் இங்கு நீ எப்படி விளையாடுகிறாய், அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறாய் என்பதே முக்கியமானது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.