சென்னை : ஐபிஎல் தொடரின் முதல் ஏலத்தின் போது தோனியை ரூ.6 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியது குறித்து ஆர்சிபி அணியின் சிஇஓ சாரு சர்மா அடித்த கமெண்ட் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் டாப்பில் சிஎஸ்கே அணி உள்ளது. 14 சீசன்களில் 5 கோப்பைகள், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம் என்று எந்த அணியாலும் கனவில் கூட நினைக்க முடியாத சாதனைகளுடன் சிஎஸ்கே அணி வலம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி.

எத்தனை வீரர்கள் மாறினாலும், யார் ஓய்வு பெற்றாலும் தோனி மட்டும் அசராமல் சிஎஸ்கே அணியின் அரசன் போல் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியால் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.6 கோடி கொடுத்து தோனியை போட்டிப்போட்டு ஒப்பந்தம் செய்தது.
தோனியின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஆர்சிபி, ராஜஸ்தான், டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ஏலத்தில் குதித்தன. ஆனால் கடைசியில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் தோனியை வாங்குவதற்கு போட்டி நடந்தது. அதில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மும்பை அணி ஏலம் கேட்டது.
ஏற்கனவே மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்தும் தோனிக்கு ஏன் இவ்வளவு தொகை என்று பலரும் ஆச்சரியமடைந்தனர். அந்த தொகையை அம்பானி ஏலத்தில் சொன்ன பின், சிஎஸ்கே அணி தரப்பில் அமைதி காக்கப்பட்டது. இதனால் சில நிமிடங்களில் அம்பானி சக நிர்வாகிகளுடன் கொண்டாட்டத்திலேயே ஈடுபட்டார்.
ஆனால் கடைசி நேரத்தில் மீண்டும் சிஎஸ்கே அணி ஏலத்தில் குதித்து தோனியை ரூ.6 கோடிக்கு கைப்பற்றியது. இந்திய அணி கேப்டன் என்றாலும், ஒரு வீரருக்கு இவ்வளவு பெரிய தொகையா என்று பலரும் ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து 2008ஆம் ஆண்டு ஆர்சிபி அணியின் சிஇஓ-வாக இருந்த சாரு சர்மா, ஒருவேளை தோனி ஐபிஎல் லீக் தொடரில் சரியாக செயல்படவில்லை என்றால், சென்னை அணி ரசிகர்களே, இவ்வளவு பெரிய தொகை கொடுத்து தோனியை வாங்கியிருக்க தேவையில்லை என்று விமர்சிப்பார்கள்.
கிரிக்கெட் என்பது ஒன் மேன் ஷோ கிடையாது. இதுவொரு குழு விளையாட்டு. சில போட்டிகளில் டக் அவுட்டாகி வெளியேறினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் ஏலத்தின் தொகை அதிகரிக்கும் போதே நாங்கள் பின் வாங்கிவிட்டோம் என்று கூறினார். இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் தான் முதல்முதலில் ராகுல் டிராவிட்டின் திறமையை கண்டறிந்தது. அதன்பின் தோனியின் திறமையையும் இந்திய ஏ அணியில் இருந்த போது விபி சந்திரசேகர் கண்டறிந்ததும் குறிப்பிடத்தக்கது.