விசாகப்பட்டினம் : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் தோனி மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடி இருந்தார்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் தான் தோனி களமிறங்கினார். அவர் வந்த போது சிஎஸ்கே அணி 23 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. சுமார் ஓராண்டுக்கு பின் பேட்டிங் செய்ய வந்த தோனி அதிரடி ஆட்டம் ஆட வாய்ப்பு குறைவு என பலரும் நினைத்த நிலையில் முதல் பந்திலேயே ஃபோர் அடித்தார். பின் நான்கு ஃபோர், மூன்று சிக்ஸ் அடித்தார். 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 231 ஆக இருந்தது.

சிஎஸ்கே அணியின் தோனிக்கு அடுத்து அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தது ரஹானே தான். அவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில், 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த வித்தியாசம் மூலமே தோனியின் முக்கியத்துவம் தெளிவாக தெரிந்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணி, சிஎஸ்கே வீரர்களை கட்டுப்படுத்த வைடு யார்க்கர் மற்றும் வைடு புல்-டாஸ் பந்துகளை வீசியது. அந்த பந்துகளை ஜடேஜா, சிவம் துபே டேரில் மிட்செல் ஆகியோரால் எளிதாக பவுண்டரிக்கு அடிக்க முடியவில்லை. ஆனால், தோனி அந்த வைடு யார்க்கர்களிலும் ஃபோர், சிக்ஸ் அடித்தார்.
இந்த நிலையில், தோனி நான்கு விக்கெட்கள் வீழ்ந்த பின் பேட்டிங் இறங்கி இருந்தால் அப்போதிருந்தே இந்த அதிரடி ஆட்டத்தை ஆடி இருக்கக் கூடும். சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து இருக்கும். ஆனால், சிவம் துபே, ஜடேஜாவால் டெல்லி அணியின் பந்துவீச்சு திட்டத்தை முறியடிக்க முடியவில்லை. 42 வயதான போதும் நல்ல ஃபார்மில் இருக்கும் தோனி முன்பே பேட்டிங் வந்திருந்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி பதற்றத்துக்கு ஆளாகி பந்துவீச்சில் தவறுகள் செய்து இருக்கும்.
இந்த காரணத்தால் இனி வரும் போட்டிகளில் தோனி பேட்டிங் வரிசையில் முன்பே களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.