MS Dhoni : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் தோனி போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிதாமகனாக இருக்கும் தோனி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் தோனிக்கு தற்போது 42 வயதாகிவிட்டது. இவர் ஏற்கனவே கடந்த சீசனில் கோப்பை வாங்கிய பிறகு ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் ஆசைக்காக மீண்டும் ஒரு முறை விளையாட இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி, தற்போது அதிலிருந்து மீண்டு பயிற்சி செய்து வருகிறார். தற்போது 42 வயது ஆகிவிட்டதால் தோனி நடப்பு சீசனுடன் ஓய்வு பெற போகிறார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் தோனி இந்த சீசன் முழுவதும் விளையாடாமல் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியை கொடுத்துவிட்டு அவர் பயிற்சியாளராக செயல்படலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் தோனி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த புதிய சீசனுக்காகவும் புதிய பொறுப்புக்காகவும் என்னால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை என்று தோனி பதிவிட்டு இருக்கிறார். பேஸ்புக்கில் தோனி பதிவு போட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. திடீரென்று தோனி இவ்வாறு போட்டு இருப்பதால் இது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது.
இதனால் தோனி முதல் போட்டியில் விளையாடிவிட்டு பிறகு பயிற்சியாளராக மாற வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் இது எதுவுமே கிடையாது. இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்று மற்றொரு தரப்பு ரசிகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே டி20 உலக கோப்பையின் போது இப்படித்தான் தோனி ஒரு விளம்பர யுக்தியை பயன்படுத்துவதாகவும், அதேபோல் ஒரு யுக்தியாக தான் இது இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி இது ஒரு விளம்பர யுக்தியாக இருந்தால், நிச்சயம் இதுபோல் தோனி ரசிகர்களை வைத்து இப்படி விளையாட கூடாது என்றும் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.