சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மகேந்திர சிங் தோனி தன்னுடைய கடைசி தொடரில் விளையாடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு கடைசியாக ஒரு முறை நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த தொடரை அவர் அணுக உள்ளார்.
இதற்காக சென்னையில் கடந்த 10 நாட்களாக தோனி பயிற்சி செய்து வருகிறார். தோனிக்கு வயதாகிவிட்டது, இதனால் அவர் எப்படி பேட்டிங் செய்யப் போகிறார் என்ற ஒரு சந்தேகம் சிலர் மத்தியில் நிலவியது.

மேலும் தோனி காயத்திலிருந்து வந்திருப்பதால் அவரால் பழைய மாதிரி அதிரடியாக ஆட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக இன்றைய பயிற்சி முகாமில் தோனி அசுரத்தனமாக விளையாடினார். பவுலர்கள் வீசிய ஒவ்வொரு பந்தையும் தன்னுடைய சிக்னேச்சர் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடி ரசிகர்களுக்கு பறக்க விட்டார்.
மேலும் கவர் திசையில் தூக்கி அடித்து தோனி ஒரு சிக்சரை பறக்க விட்டார். இதனை பார்க்கும் போது தோனி பேட்டிங்கில் படு மாஸான ஆட்டத்தை இம்முறை ரசிகர்களுக்கு காட்டுவார் என்று நம்பப்படுகிறது. மேலும் கடந்த சீசன்களில் தோனி கடைசியாக தான் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று பந்துகளை தான் எதிர்கொள்ளும் நிலை தோனிக்கு ஏற்பட்டது.
அதற்கு காரணம் அவருடைய காலில் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. தற்போது அதிலிருந்து தோனி மீண்டும் வந்திருப்பதால், தோனி தற்போது அதிரடி முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கிறது. அதன்படி சிஎஸ்கே அணியின் நடுவரிசையில் அம்பத்தி ராயுடு இல்லாத நிலையில் தற்போது அந்த இடத்தில் தோனி களம் இறங்குவார் என தெரிகிறது.
இது கடைசி சீசன் என்பதால் தமது பேட்டிங்கை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தோனி எடுத்திருப்பதாக தெரிகிறது. கடந்த சீசனில் ரசிகர்கள் தமது பேட்டிங்கை பார்க்க முடியவில்லை என்று ஏமாற்றம் அடைந்த நிலையில் அதற்காகவே தன்னை தோனி பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார். இந்த பயிற்சி முகாமில் தோனி அடித்த ஒவ்வொரு சாட்டையும் பார்க்கும்போது இவருக்கு வயசே ஆகல என்ற படையப்பா வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. இதனால் இம்முறை எதிரணி பவுலர்கள் வசமாக தோனியிடம் சிக்கிக்கொண்டனர்.