ஐதராபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. இதற்கு காரணம் 42 வயதான தோனிக்கு கடந்த சீசனில் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனை சரி செய்வதற்காக தோனி அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறார். இந்த நிலையில் தோனியின் வயது மூப்பு காரணமாக அவருடைய உடல் பழைய படி ஒத்துழைக்கவில்லை.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி சரவெடியை காட்டினாலும், அதன் பிறகு காலில் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் தோனி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தோனிக்கு நான்கு நாட்கள் ஓய்வு கிடைத்ததால் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதில் தோனியின் காயம் பெரிய அளவில் குணமாகி இருக்கிறது. மேலும் இதற்காக வலி நிவாரண ஊசிகளையும் செலுத்திக் கொண்டதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் தோனி நிச்சயம் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என்பது உறுதி. தேவைப்பட்டால் தோனி பேட்டிங்கிற்கும் வர வாய்ப்பு இருக்கிறது.
இந்த அட்டவணையில் சிஎஸ்கேவுக்கு அதிக அளவு ஓய்வு வழங்கப்பட்டிருப்பதால், தோனி அதற்கு தகுந்தார் போல் தன்னுடைய பயிற்சி திட்டத்தை மாற்றி இந்த தொடர் முழுவதும் விளையாட திட்டமிட்டு இருக்கிறார். இதுவே தோனிக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமக்கு காயம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை சமாளித்து ரசிகர்களுக்காக விளையாடுகிறேன் என்று முடிவில் தோனி இருக்கிறார்.
இதனால் ஹைதராபாத்தில் உள்ள ரசிகர்கள் தோனியின் சரவெடியை இன்று எதிர் பார்க்கலாம். குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சை தோனி சிதறடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் புவனேஸ்வர் குமார் இடம் 57 பந்துகளை எதிர் கொண்ட தோனி இதுவரை 94 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு முறை கூட அவர் அவுட் ஆகவில்லை. இதே ஹைதராபாத் மைதானங்களில் தோனி பல அதிரடியை காட்டி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தோனியின் தரிசனத்திற்காக மகிழ்ச்சியில் காத்திருக்கிறார்கள்.