சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் கடைசியாக தோனி பங்கேற்க இருப்பதாகவும், அதன் பின் அவர் ஓய்வு பெறுவார் என ஒரு பேச்சு இருக்கும் நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தோனியின் பேட்டிங் குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தோனி 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின் அவர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று வருகிறார். 40 வயதை கடந்த நிலையிலும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டி அவர் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார்.

2023 ஐபிஎல் தொடரில் கூட அணியை சிறப்பாக வழி நடத்திய தோனி கேப்டனாக ஐந்தாவது ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். அந்த தொடரில் அவர் சில போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்தார். அதில் சில போட்டிகளில் அவர் பழைய நினைவுகளை தூண்டும் வகையில் சிக்ஸர்களை பறக்க விட்டு இருந்தார்.
இந்த நிலையில் தோனியின் தீவிர ரசிகரைப் போல சுனில் கவாஸ்கர் தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் தோனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேசுகையில், "ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சிக்ஸ். ஆறு ரன்கள் எடுக்க வேண்டும் என நான் கூறவில்லை. ஒரு சிக்ஸ் அடிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு முறை அவர் பேட்டிங் செய்ய வரும் போதும், 14 இன்னிங்க்ஸ்களில் 14 சிக்ஸ் அடிக்க வேண்டும். அப்படி செய்தால் நான் கொடுத்த காசுக்கு அது போதுமானதாக இருக்கும். அதை விட அவர் அதிக சிக்ஸ் அடித்தால் நன்றாக இருக்கும்" என்றார் சுனில் கவாஸ்கர்.
அடுத்து தோனி காலில் அறுவை சிகிச்சை செய்த பின் எப்படி இருக்கிறார் என்பது குறித்து பேசினார் கவாஸ்கர். "நான் தோனியுடன் 2 மணி நேரம் பேசினேன். அந்த 2 மணி நேரமும் அவர் நின்று கொண்டு தான் பேசினார். அறுவை சிகிச்சை செய்த பின் இருக்கும் வலி அவரிடம் இல்லை. அவர் சற்று மெலிந்து இருக்கிறார். இது சிறப்பான ஐபிஎல் தொடராக இருக்கப் போகிறது. அவர் பேட்டிங் ஆர்டரில் கொஞ்சம் மேலே வந்து ஆட வேண்டும் என விரும்புகிறேன்" என்றார் சுனில் கவாஸ்கர்.