சென்னை : 2024 ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெற இருக்கிறார்.
அதற்கு முன்னதாக ஓய்வு பெற்ற பின்னரும் ஐபிஎல் தொடரில் தன்னை ஆதரித்து வரும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய பரிசு ஒன்றை தயார் செய்து வருகிறார் தோனி.
2007 டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு முன்பு வரை தோனி நீண்ட முடியுடன் இருந்தார். அது தான் தோனியை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. பின்னர் தன் ஹேர்ஸ்டைலை மாற்றி சிறிதாக வைத்துக் கொண்டார். ஆனாலும், ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.

பல முறை தோனி மீண்டும் நீண்ட முடியுடன் இருந்தால் வெறித்தனமாக இருக்கும் என சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தன் கடைசி ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற அவர் முடிவு செய்து விட்டார். தன் ரசிகர்களுக்கு கடைசியாக ஓய்வு பெறும் முன்பு இதையே பரிசாக கொடுக்க இருக்கிறார்.
அதிலும் ஓராண்டாக முடி வளர்த்து அதை பெரிய ஹேர்ஸ்டைலிஸ்ட் நிபுணர் ஒருவரை வைத்து பராமரித்து வருகிறார். 2024 ஐபிஎல் தொடர் துவங்கும் முன் நீண்ட முடியை தயார் செய்து தன் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறார் தோனி.
இது பற்றி சமீபத்தில் அவர் பேசுகையில், இது போல நீண்ட முடியை பராமரிக்க தினமும் 70 நிமிடங்கள் ஆகிறது. ஆனால், ரசிகர்களின் விருப்பத்துக்காக இதை செய்கிறேன் என கூறி இருந்தார். மும்பையில் இருக்கும் பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீமுடன் கடந்த 2023 ஐபிஎல் தொடர் முடிந்த உடனே தான் நீண்ட முடி வளர்க்க இருப்பதாக கூறி இருக்கிறார்.
ஆலிம் ஹக்கீம் கூறிய யோசனைகளின் படி முடியை பராமரித்து, ஓராண்டுக்குள் 2005 கால கட்டத்தில் இருந்த பழைய தோனியாக மாற இருக்கிறார். தற்போது தோனிக்கு 42 வயதாகிறது. அவருக்கு கால் மூட்டு எலும்பில் காயம் உள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அதில் இருந்து மீண்டு வந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியில் கலந்து கொள்வார்.அதன் பின்னரே 2024 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பது 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.