சென்னை : சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தோனி கேப்டன் பதவியை ருதுராஜ் வசம் அளித்து இருக்கிறார். என்னதான் கேப்டனை மாற்றி இருந்தாலும் சிஎஸ்கே அணியில் தோனி தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கப் போகிறார் என முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி கூறி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 14 ஆண்டுகள் இருந்த தோனிக்கு தற்போது 42 வயது ஆகிறது. அவரால் இனியும் தீவிரமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல்-இல் ஆடுவது என்பது கடினமான காரியம் தான். எனவே, அவருக்கு அடுத்த கேப்டன் யார் என்பதை அடையாளம் காண வேண்டிய நிலையில் இருந்தார்.

27 வயது ஆகும் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக ஆடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ரன் குவித்து தன் ஃபார்மை நிரூபித்து இருக்கிறார். அமைதியான குணத்தை கொண்டவராக இருக்கிறார். இதை எல்லாம் வைத்து அவரை கேப்டனாக்கி இருக்கிறார் தோனி.
ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. முன்னாள் ஆர்சிபி அணி வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் அதை குறிப்பிட்டு, தோனி தான் எல்லா முடிவுகளையும் எடுக்கப் போகிறார் என கூறி இருக்கிறார். அப்படி என்றால் ருதுராஜ் வெறும் டம்மி கேப்டனா? என சில ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி வெளியிட்ட பதிவில், "இனி ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் போட்டிகள் முடிந்த உடன் கேப்டனாக தோனி பேசுவதை நாம் காண முடியாது. ஆனால், போட்டியில் யார் எல்லா முடிவுகளையும் எடுப்பார்கள் என நமக்கு தெரியும்." என குறிப்பிட்டு இருக்கிறார்.