சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் வர வாய்ப்பு உள்ளதாகவும், தோனி அவரை அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு அழைத்து வருவார் எனவும் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கூறி இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்ட போது அடுத்த தோனி என வர்ணிக்கப்பட்டார். அதிரடி ஆட்டம் ஆடும் இயல்பு கொண்டவர் என்பதால் தோனி போல பினிஷராக வருவார் என கூறப்பட்டது. ஆனால், முதல் சில ஆண்டுகள் தடுமாறிய ரிஷப் பண்ட் பின் தனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து விக்கெட் கீப்பர் - அதிரடி பேட்ஸ்மே என்ற அடையாளத்துக்குள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சொத்தாக பார்க்கப்படுகிறார் ரிஷப் பண்ட். தற்போது அந்த அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். 2022 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் அந்த அணி பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஆனாலும், இந்த முறை ரிஷப் பண்ட்டை தக்க வைத்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.
இந்த நிலையில் தீப்தாஸ் குப்தா சிஎஸ்கே அணிக்கு ரிஷப் பண்ட்டைடானி அழைத்து வருவார் எனக் கூறி இருக்கிறார். "2025 ஐபிஎல்-இல் ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே அணி பெற்றாலும் ஆச்சரியப்பட வேண்டாம். எம்எஸ் தோனியும் ரிஷப் பண்ட்டும் மிகவும் நெருக்கமானவர்கள். வெளிப்படையாக, ரிஷப் எம்.எஸ் தோனியை நேசிக்கிறார். மேலும் எம்.எஸ்ஸும் அவரை மிகவும் விரும்புகிறார்." என்றார் தீப்தாஸ் குப்தா.
மேலும், "அவர்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவிடுகிறார்கள். அவர்களது தொடர்பும், ரிஷப்பின் சிந்தனையும் மிகவும் ஒத்திருக்கிறது, அவர் மிகவும் அதிரடி ஆட்டம் ஆடுபவராகவும், நேர்மறையாகவும் இருக்கிறார். அவர் எப்பொழுதும் வெற்றி பெறுவதைப் பற்றி பேசுகிறார்," என பண்ட் சிஎஸ்கேவுக்கு வருவது பற்றி கூறினார் தீப்தாஸ் குப்தா.
தீப் தாஸ் குப்தா சொல்லும் விஷயம் கேட்க நன்றாக இருந்தாலும் டெல்லி கேபிடல்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அணியில் இருந்து நீக்குமா? ரிஷப் பண்ட் தானாக அந்த அணியை விட்டு சிஎஸ்கே அணிக்கு வருவாரா? என்ற கேள்விகள் எழுகின்றன.