IPL 2024 : மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்டியாவுக்கு முதல் அடி.. சூர்யகுமார் யாதவால் வந்த சிக்கல்
மும்பை : உலகின் முன்னணி டி20 பேட்ஸ்மேனாக அறியப்படும் சூர்யகுமார் யாதவ், 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு லீக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ள நிலையில், சூர்யகுமார் யாதவால் அணியின் பேட்டிங் வரிசையில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின் அவருக்கு குடல் இரக்கம் காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் அவர் உடற்தகுதியை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் தயாராகி விடுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் போட்டிகளில் பங்கேற்க மேலும் சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. தற்போது அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருக்கிறார்.
அங்கு இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவ் ஏப்ரல் மாத துவக்கத்தில் தான் போட்டிகளில் விளையாட முழு உடற்தகுதி பெற முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
அந்த இரண்டு போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலத்த அடியாகும். சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக வேறு இந்திய வீரரை தேர்வு செய்து அணியின் பேட்டிங் வரிசையை சம நிலைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வரும் நிலையில், அந்த இடத்திற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன நெஹால் வதேரா தேர்வு செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications