IPL 2024 : ரோஹித் அதிரடி நீக்கம்.. மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு
மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
2013இல் இருந்து மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

சில வாரங்கள் முன்பு தான் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி மாற்றம் செய்து இருந்தது. இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கி இருக்கும் நிலையில் அவர் அணியில் ஒரு வீரராக இடம் பெறுவாரா? அல்லது ஓரங்கட்டப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். அங்கே அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை அழைத்துச் சென்றார். இந்த நிலையில், அவருக்கு குஜராத் அணியுடன் கருத்து வேறுபாடு எழுந்ததால் ஐபிஎல் நேரடி விற்பனை மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவினார்.
ஹர்தின் பாண்டியா மும்பை அணிக்கு மீண்டும் வந்த போதே குஜராத் அணியில் கேட்பனாக இருந்த பாண்டியா நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை உறுதி செய்த பின்னரே அணி மாறி இருப்பார் என கூறப்பட்டது. அதே போல, தற்போது மும்பை அணி கேப்டனாக அறிவித்து இருக்கிறது.
ஹர்திக் பாண்டியாவை 2024 ஐபிஎல் சீசனுக்கான கேப்டனாக மும்பை இந்தியன்ஸால் அறிவித்துள்ள நிலையில், இந்த கேப்டன் மாற்றம் குறித்து மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவரான மஹேல ஜெயவர்தனே கருத்து தெரிவிக்கையில், "இது பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாகும். மேலும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தத்துவத்திற்கு உண்மையாக இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." என்றார். மேலும், இந்த அறிக்கையில் ரோஹித் சர்மா மும்பை அணிக்கு ஐந்து கோப்பைகள் வென்று கொடுத்ததை நினைவு கூர்ந்து இருக்கிறார் ஜெயவர்தனே. ஆனால், ரோஹித் சர்மா அணியில் முக்கிய வீரராக இருப்பாரா? என்பது குறித்து எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.
இந்த விளக்கம் மூலம் ரோஹித் சர்மாவை கை கழுவ மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. அவருக்கு 36 வயதாகும் நிலையில், ஐபிஎல் எதிர்காலம் சரிவை சந்திக்கத் துவங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications