மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தனக்கு இருக்கும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்குள்ளேயே அவர் கேப்டன் ஆனதை விரும்பாத பலர் உள்ளனர். மேலும், மும்பை அணியின் ரசிகர்களும் அவரை வெறுத்து கோஷமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி தன் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சோம்நாத் சிவன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி இருக்கிறார். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது, கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த தோல்விகள் அவரை இன்னும் அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

இனியாவது தொடர்ந்து வெற்றிகள் பெற்றால் மட்டுமே ரசிகர்களின் எதிர்ப்பு மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் அதிருப்தியை ஹர்திக் பாண்டியாவால் சமாளிக்க முடியும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறினால் கூட அடுத்த ஆண்டு முதல் ஹர்திக் பாண்டியா எதிர்ப்புகள் இன்றி இருக்க முடியும். இந்த அழுத்தமான சூழ்நிலையில் இருக்கும் ஹர்திக் பாண்டியா தனது பிரச்சனைகளை தீர்க்க தற்போது கடவுளின் உதவியை நாடி இருக்கிறார்.
கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு ஆறு நாட்கள் ஓய்வு எடுக்க கால அவகாசம் இருந்த நிலையில் மும்பை வீரர்கள் சுற்றுலா சென்று தங்கள் தோல்விகளில் இருந்து மனதை வேறு பக்கம் திசை திருப்பி உள்ளனர். இதற்கிடையே ஹர்திக் பாண்டியா ஒரு நாள் மட்டும் அணியை விட்டு விலகி சோம்நாத் கோவிலுக்கு சென்று இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது. ஏப்ரல் 7 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.