மும்பை : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது ஆடுகளத்துக்கு வெளியே இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் டிம் டேவிட் மற்றும் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட் ஆகியோர் வைடு கேட்குமாறு பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவுக்கு சைகை காட்டினர்.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. தொலைக்காட்சியில் வெளியான இந்த காட்சிகளை கண்டு ரசிகர்கள் கொந்தளித்தனர். கிரிக்கெட் விதிப்படி களத்துக்கு உள்ளே இருக்கும் வீரருக்கு வெளியே இருக்கும் யாரும் போட்டியில் அம்பயரிடம் ரிவ்யூ கேட்க எந்த வகையிலும் உதவக் கூடாது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்த போது 15வது ஓவரில் சூர்யகுமார் ஒரு பந்தை அடிக்க நகர்ந்து சென்று முயன்றார். ஆனால், பந்து பேட்டில் படாமல் தூரமாக சென்றது. சூர்யகுமார் யாதவ் நகர்ந்து வந்ததால் அதற்கு வைடு கொடுக்க மறுத்து விட்டார் களத்தில் இருந்த அம்பயர்.
அப்போது வெளியே இருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் டிம் டேவிட் ரிவ்யூ கேட்குமாறு சைகை செய்து பின்னர் தான் திரையில் காட்டப்படுகிறோம் என்பதை உணர்ந்த உடன் கைகளை மடக்கிக் கொண்டார். அதே போல பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட் ரிவ்யூ கேட்குமாறு வாயசைவிலும், சைகையிலும் கூறினார்.
இதைப் பார்த்த சூர்யகுமார் யாதவ் உடனடியாக ரிவ்யூ கேட்டார். விதிப்படி அதற்கு வைடு கொடுக்கக் கூடாது. ஆனால், மூன்றாவது அம்பயர் சூர்யகுமார் யாதவ் நகர்ந்ததை கருத்தில் கொள்ளாமல் பந்து வைடாக சென்றதாக அறிவித்தார். இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும், மூன்றாவது அம்பயரை விலைக்கு வாங்கி விட்டதாகவும் இணையத்தில் ரசிகர்கள் விமர்சனத்தை முன் வைத்தனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த டிம் டேவிட் மற்றும் கீரான் பொல்லார்ட் ஆகியோருக்கு மேட்ச் ரெப்ரீ 20 சதவீதம் அபராதம் விதித்தார். இனி இது போன்ற தவறுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ஈடுபட்டால் ரசிகர்கள் அந்த அணியின் வெற்றிகள் எல்லாமே அம்பயரின் உதவியுடன் பெற்றதாகவே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.