ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு சோகமான சாபம் அவர்களை கடந்த 11 ஆண்டுகளாக பின் தொடர்ந்து வருகிறது. சச்சின், ரோகித் சர்மா, தற்போது ஹர்திக் பாண்டியா என பல கேப்டன்கள் மாறினாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த பிரச்சனை மட்டும் தீருவதே கிடையாது.
அதாவது ஒரு அணி கோப்பையை வெல்கிறதோ இல்லையோ தொடக்கம் சரியாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய ஒவ்வொரு சீசனில் முதல் போட்டியில் கடந்த 11 ஆண்டுகளாக வெற்றி பெற்றதே இல்லை என்பதுதான் சோகம்.

2013 ஆம் ஆண்டு ஆர்சிபி யுடன் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை அணி 2014 ஆம் மற்றும் 2015 ஆம் ஆண்டு கேகேஆர் அணியுடன் முதல் போட்டியில் விளையாடி தோல்வியை தழுவி இருக்கிறது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு புனே அணியுடன் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை பதிவி இருக்கிறது.
2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியை தங்களுடைய முதல் போட்டியில் எதிர்கொண்ட மும்பை அணி தோல்வியை தழுவியது. 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு டெல்லி அணியை எதிர்கொண்ட மும்பை அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. 2021 ஆம் ஆண்டு ஆர்சிபியை எதிர்கொண்டு தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி, 2022 ஆம் ஆண்டு டெல்லி அணியையும், 2023 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியையும் எதிர்கொண்டு தோற்றது.
தற்போது 2024 ஆம் ஆண்டு மீண்டும் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டு தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் எப்போது தான் முதல் போட்டியை நாம் வெல்வோமோ என்று சோகத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா தற்போது கேப்டனாக இருப்பதால் முதல்முறையாக மும்பை அணி தோல்வியை தழுவியதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
எப்படி எம்ஜிஆர் போன்ற மாஸ் நடிகர்கள் வில்லன்களிடம் முதல் அடி வாங்கிவிட்டு பிறகு அடித்து, பிரித்து மேய்வார்களோ அதை போல் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதுமே முதல் போட்டியில் தோற்று விட்டு பின் அதிரடியாக விளையாடும் என்றும் சிலர் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.