மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை கதிகலங்க வைத்து வருகின்றனர் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள். சமூக ஊடகங்களில் அந்த அணி இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்ப்பை சந்தித்து வருவதோடு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை இழந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சில நாட்கள் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா 2024 ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணி அறிவித்தது.

இந்த மாற்றத்தை ரோஹித் சர்மாவின் ரசிகர்களும், பொதுவான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் விரும்பவில்லை. இதை அடுத்து அவர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஐந்து நாட்களாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின் தொடர்வதை நிறுத்த வேண்டும் என பிற மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை வலியுறுத்தி வருகிறார்கள்.
அதன் காரணமாக, உலகின் முன்னணி சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி 10 லட்சம் ரசிகர்களை இழந்துள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படும் முன்பு மும்பை அணியை இன்ஸ்டாகிராமில் 1.33 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர். ஆனால், தற்போது 1.23 கோடி ரசிகர்களாக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும், இந்த எண்ணிக்கையை குறையாமல் பார்த்துக் கொள்ள போலியான கணக்குகள் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி வருவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர். அது உண்மை என்றால், மும்பை அணி 10 லட்சத்துக்கும் மேல் ரசிகர்களை இழந்து இருக்கும்.
இந்த அளவுக்கு ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கம் ரசிகர்களை பாதிக்க இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், ரோஹித் சர்மா இன்னும் ஒரு ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் முழு தகுதியோடு இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக மிக அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார். அப்படிப்பட்ட ஒரு வீரரை எந்த அணியும் குறைத்து மதிப்பிடுவது சரியான விஷயம் அல்ல என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
இரண்டாவது காரணம், ரோஹித் சர்மாவுக்கு பின்னர் மும்பை அணியில் துவக்கம் முதல் இடம் பெற்று வரும் பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக ஆக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்களில் ஒருவரை கேப்டனாக நியமித்து இருந்தால் கூட இத்தனை எதிர்ப்பு கிளம்பி இருக்காது.