மும்பை : டி20 அணித் தேர்வில் எதிர்பார்க்காத திருப்பமாக ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவரது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் இடம் இருந்து மறைமுக அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது.
இதில் மற்றொரு விஷயம் என்னவெனில், ரோஹித் டி20 அணியில் இடம் பெறவில்லை என்றால் ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்திருப்பார். ரோஹித் அணியில் இடம் பெற்றாலும் கூட பாண்டியாவை டி20 அணி கேப்டனாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இடம் பெற வேண்டும் என மறைமுகமாக மும்பை இந்தியன்ஸ் அழுத்தம் கொடுத்துள்ளது.

சில வாரங்கள் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி, பத்து ஆண்டுகள் தங்கள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி கேப்டனாக அறிவித்தது. அதனால் மும்பை அணி ரசிகர்கள் இடையே பெரும் விமர்சனம் எழுந்தது. பெரும்பாலானோர் பாண்டியா கேப்டனாக வந்ததை விரும்பவில்லை.
அதே சமயம், ரோஹித் சர்மா கேப்டன்சி மாற்றம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை வைத்தே அவர் மும்பை அணி மீது அதிருப்தியில் இருக்கிறார் என கூறப்பட்டு வந்தது. இதனிடையே 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என ஒரு தகவல் வலம் வந்தது. அதற்கேற்ப ரோஹித் சர்மா கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் இடம் பெறாமல் இருந்தார்.
ஆனால், தற்போது அவர் 2௦24 டி20 உலகக்கோப்பையில் ஆட விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அதனால், பிசிசிஐ மீண்டும் ரோஹித் சர்மாவை டி20 அணி கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதன் மூலம், ரோஹித், பாண்டியா கேப்டன் ஆவதை தடுக்கிறார் என கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட்டில் செல்வாக்கு கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, தங்கள் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா பக்கம் தான் நிற்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அந்த அணி ரோஹித் சர்மா கேப்டனாக வருவதையே விரும்புவதாக மறைமுகமாக உணர்த்தி உள்ளது. மேலும், பிசிசிஐக்கு வேறு வகையில் அழுத்தம் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா ரசிகர்கள் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மீது கோபத்தில் உள்ளனர். அதே போல, ரோஹித் சர்மாவும் அந்த அணி மீது அதிருப்தியில் இருக்கிறார். எனவே, அவரை தங்கள் பக்கம் மீண்டும் இழுக்கவே மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முயற்சியை செய்கிறது எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் தங்களின் சமூக ஊடக பக்கத்தில் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பரத்தில் பாகிஸ்தான் கேப்டன் ஷஹீன் அப்ரிடியுடன், ரோஹித் சர்மா படத்தை பயன்படுத்தி இருக்கிறது. அதன் மூலம், ஹர்திக் பாண்டியா இருந்தாலும், இந்திய அணியில் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வதை தாங்கள் ஆதரிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி உணர்த்தி இருக்கிறது.