மும்பை : ஹர்திக் பாண்டியா - பும்ரா இடையே ஈகோ மோதல் நடந்து வருவதாக மும்பை இந்தியன்ஸ் அணி வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவை மதிக்காமல் நடந்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில் பும்ராவுக்கும் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவுக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி தனக்கு தான் வந்து சேரும் என பும்ரா நினைத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதை அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விசுவாசமாக ஏலத்திற்கு செல்லாமல் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே நீடித்து வருகிறார் பும்ரா. ஆனால், ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தாவினார். பின் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவி கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிடம் இருந்து பறித்து விட்டார்.
இந்த வேலைகள் எல்லாம் முடிந்து ஒரு வழியாக ஐபிஎல் தொடரில் அனைத்து வீரர்களும் ஒன்றாக விளையாடத் துவங்கினர். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியிலேயே கேப்டன் என்ற முறையில் ஹர்திக் பாண்டியா தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார். ஆனால், அதில் பல முடிவுகள் தவறாக சென்றதை அடுத்து ரோஹித் சர்மாவிடம் ஃபீல்டிங்கை ஒப்படைத்து விட்டதாக சில வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், ஓவர்களை பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கும் பணியை ஹர்திக் பாண்டியாவே மேற்கொண்டு வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான பும்ராவை முதல் ஓவரில் பயன்படுத்தாமல், மிடில் ஓவர்கள் மற்றும் கடைசி ஓவர்களுக்கு மட்டுமே அவரை பயன்படுத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முதல் போட்டியிலேயே இந்த திட்டம் பலனளிக்கவில்லை. ஆனால், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஓவர்கள் எல்லாம் 138 ரன்கள் குவித்த நிலையிலும் 13வது ஓவர் வரை பும்ரா ஒரு ஓவர் மட்டுமே வீசி இருந்தார். சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த பும்ராவுக்கு தொடர்ந்து ஓவர்கள் கொடுத்திருக்க வேண்டும் என பலரும் கூறினர்.
ஹர்திக் பாண்டியா, பும்ராவுக்கு முதல் 10 ஓவர்களில் ஒரு ஓவர் மட்டுமே கொடுப்பதில் பிடிவாதமாக இருந்தார். இதன் பின்னணியில் இருவருக்கும் ஈகோ மோதல் நடந்து வருவதே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் பும்ரா தான் மும்பை அணியின் பந்துவீச்சு திட்டங்களை செயல்படுத்துவார் என பாண்டியா கூறி இருந்தார். ஆனால், நடப்பது அதற்கு நேர்மாறாக உள்ளது.