மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக மோசமான முடிவுகளை எடுத்ததோடு, பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டார். அது குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் முகத்தில் அடித்தாற்போல கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அளிக்காமல் தானே வீசினார். அதன் மூலம் அவர் ஒரு கேப்டனாக தனது அணியின் பந்துவீச்சாளர்களையே நம்பவில்லை என பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். ஹர்திக் பாண்டியா முழு நேர வேகப் பந்துவீச்சாளர் இல்லை. அதே போல அவர் முதல் ஓவர் மற்றும் கடைசி ஓவரை வீசும் அளவுக்கு திறன் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளரும் இல்லை என்பதே முன்னாள் வீரர்கள் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்கள் கொடுத்து இருந்தார் பாண்டியா. பின்னர் தனது இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார். எனினும், கடைசி ஓவரை ஆகாஷ் மதவாலுக்கு அளிக்காமல் ஹர்திக் பாண்டியா தானே வீசினார். அதன் மூலம் சிஎஸ்கே அணியின் ரன் குவிப்பை கடைசி ஓவரில் தடுக்கலாம் என அவர் நினைத்தார். ஆனால், சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 26 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இர்பான் பதான், "கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசியது ஆகாஷ் மதவால் மீதான நம்பிக்கையின்மையை காட்டியது. மேலும், கடைசி ஓவர் பந்துவீச்சாளராக அவருக்கு திறமை இல்லாததையும் காட்டியது" என கூறி இருக்கிறார். இந்த பதிவின் கீழ் பலரும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பதிவிட்டு உள்ளனர்.
இந்தப் போட்டியின் தோல்வியால் ஹர்திக் பாண்டியா மீண்டும் மோசமான அழுத்தத்தில் சிக்கி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. இனி பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால் அடுத்த எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற வேண்டும்.