மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சில வாரங்கள் முன்பு ரோஹித் சர்மா நீக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய டெஸ்ட் அணி குறித்த அறிவிப்பை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கான பதிவில் ரோஹித் சர்மா புகைப்படத்தை கூட பயன்படுத்தவில்லை.
மும்பை இந்தியன்ஸ் சமூக ஊடக பக்கங்களில் வெளியாகி இருக்கும் இந்திய டெஸ்ட் அணி குறித்த பதிவில் கே எல் ராகுல் முன்னேயும், அவருக்கு பின்னே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ராவும் இடம் பெற்றுள்ளனர். ரோஹித் சர்மாவை குறி வைத்தே இப்படி நடந்துள்ளதாக ரசிகர்கள் கொதித்து போய் இருக்கின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பில் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. பிசிசிஐ டெஸ்ட் அணியை அறிவித்த உடன் மும்பை இந்தியன்ஸ் தன் பங்கிற்கு அணி அறிவிப்பை வெளியிட்டது. பொதுவாக அணி அறிவிப்பு குறித்த போஸ்டர்களில் நிச்சயம் அணியின் கேப்டன் புகைப்படம் இடம் பெறும். அதன் பின்னர் அணியின் மூத்த வீரர்கள், முக்கிய வீரர்கள் புகைப்படங்கள் இடம் பெறும்.
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட போஸ்டரில் கே எல் ராகுல் படம் முன்னே இருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் பலர், இந்திய டெஸ்ட் அணிக்கு கே எல் ராகுல் தான் கேப்டனா? ரோஹித் சர்மா கேப்டன் இல்லையா? அவர் புகைப்படம் எங்கே? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா, மற்றும் முக்கிய வீரர்களாக விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் இடம் பெற்று இருந்த நிலையில் அவர்களில் பும்ரா படத்தை மட்டுமே மும்பை அணி பயன்படுத்தி உள்ளது. ரோஹித் சர்மாவை அந்த அணி விரும்பவில்லை என்பது இதில் இருந்தே தெரிவதாக ரோஹித் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.