மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வீரரை அணியில் சேர்க்க 100 கோடி கொடுத்ததாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு டிரேடிங் செய்தது. அப்போது பாண்டியாவின் சம்பளமான 15 கோடி மும்பை இந்தியன்ஸ் கையிருப்பில் இருந்து குறைந்தது. அதே அளவு தொகை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கையிருப்பில் அதிகரித்தது. அந்த தகவல் மட்டுமே முதலில் வெளியாகி இருந்தது.

ஆனால், ஹர்திக் பாண்டியாவின் சம்பளத்தை தாண்டி அணி மாற்றத் தொகையாக பணம் பெற்றுக் கொண்டே குஜராத் டைட்டன்ஸ் ஹர்திக் பாண்டியாவை விட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அது 10 முதல் 30 கோடி வரை இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், தற்போது 100 கோடி ரூபாய் கொடுத்தே மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு பெற்றுக் கொண்டது என ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மையாக இருக்க வாய்ப்பு மிகவும் அதிகம். காரணம், குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டனை விட்டுக் கொடுத்துள்ளது. அதுவும் ஒரு முறை கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். இரண்டாவது முறை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்று இருக்கிறார்.
அப்படிப்பட்ட வீரரை மற்றொரு அணிக்கு விட்டுக் கொடுக்க யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி விருப்பம் இல்லாமல் பாண்டியாவை தங்கள் அணியில் வைத்து இருப்பதற்கு பதிலாக வியாபார ரீதியாக இதை சிந்தித்து பெரிய ஜாக்பாட்டை அடித்துள்ளது.
அது என்ன ஜாக்பாட்? குஜராத் டைட்டன்ஸ் அணியை நடத்துவது சிவி கேபிடல் என்ற முதலீட்டு நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் முதலீடு உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பை வெல்வது என்பதை விட வருடத்தின் முடிவில் அந்த அணியின் சொத்து மதிப்பீடு என்ன என்பதே முக்கியம்.
அந்த வகையில் 100 கோடி பெற்றுக் கொண்டு பாண்டியாவை அனுப்புவதன் மூலம், அந்த அணியின் மதிப்பீடு அடுத்த ஆண்டு கணக்கு முடிக்கும் போது 100 கோடி அதிகரிக்கும். அந்த அணியின் உரிமையாளர்களை பொறுத்தவரை சொத்து மதிப்பே முக்கியம். சிவி கேபிடல் ஒரு முதலீட்டு நிறுவனம் என்பதால் நாளையே கூட குஜராத் டைட்டன்ஸ் அணியை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டு சென்றாலும் ஆச்சரியம் இல்லை.
அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் உரிமையாளருக்கு ஹர்திக் பாண்டியாவை விட அந்த 100 கோடி தான் முக்கியமானதாக தெரிந்து இருக்கும். மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்திய அணியின் முகமாக இருக்கும் ஒரு வீரர் கேப்டனாக வர வேண்டும். இனி டி20 போட்டிகள் தான் எதிர்காலம் என்ற நிலையில், இந்திய டி20 அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாக வர வாய்ப்பு உள்ள ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி எத்தனை கோடி கொடுத்தாவது பெற்று விட வேண்டும் என குறியாக இருந்து பெற்று இருக்கிறது.
இந்த சம்பவத்தை பார்க்கும் போது சில ஐபிஎல் அணிகள் வீரர்களை மனிதர்களாகவே பார்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இப்படி 100 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, கணுக்கால் காயம் குணமாகாத நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதே சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையானால் மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப் பெரிய தவறை செய்த அணியாக மாறும்.