மும்பை : ஐபிஎல் அணிகளில் பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் மனைவி அது குறித்து ஒரு சமூக வலைதள பதிவை போட்டு பின்னர் அழித்து இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா வர வாய்ப்பு இருந்த நிலையில், அவர் 2022 ஐபிஎல் தொடரின் போது மும்பை அணியில் இருந்து விலகி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினர். அங்கே கேப்டன் பதவி பெற்றார்.
இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்த போது, பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் பெயர்கள் வரிசையாக கூறப்பட்டது. பாண்டியா போலவே இவர்கள் மூவரும் கூட மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் வீரர்கள்.
ரோஹித் இன்னும் ஓராண்டு ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படுவார், அதன் பின் பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் கேப்டன் ஆவார் என்ற எதிர்பார்ப்பு தான் அந்த அணியின் வீரர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது. ஆனால், அதற்கு மாறாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு அழைத்து வந்ததோடு அவரை கேப்டனாக்கி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் மனைவி வெளியிட்ட பதிவில், "நீங்கள் மனிதர்களை நடத்தும் விதம் எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும்" என கூறப்பட்டு இருந்தது. அதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரர்கள் இடையே பெரிய அளவில் அதிருப்தி இருப்பது வெளியாகி உள்ளது.
தற்போது சூர்யகுமார் யாதவ் மனைவி வெளியிட்டுள்ள பதிவால், இந்த கேப்டன் மாற்றம் குறித்து அணியில் நீண்ட காலமாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோரிடம் பேசப்படவில்லை அல்லது அவர்கள் பாண்டியாவை கேப்டனாக ஏற்க மறுத்தும் இந்த மாற்றம் நடந்து இருப்பது தெரிகிறது. ஏற்கனவே, பும்ரா "அமைதியே சிறந்த பதில்" என ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பிய போது சூசகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். விரைவில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மத்தியில் இருக்கும் புகைச்சல் மேலும் வெளிச்சத்துக்கு வரக் கூடும்.