பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது விராட் கோலி தான். ஆனால், இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனிலும் விராட் கோலி அபாரமாக விளையாடி ரன்களை அடித்து வருகிறார்.
இதன் மூலம் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருக்கிறார். இத்தனை வருடத்தில் இம்முறையாவது ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல் பாதியில் தொடர்ந்து தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி தற்போது தொடர்ந்து ஆறு வெற்றியைப் பெற்று பிளே ஆஃப்க்கு தகுதி பெற்று இருக்கிறது.

ஆனால் ஆர்சிபி அணி சாம்பியன் படத்தை வெல்ல வேண்டும் என்றால் இன்னும் மூன்று வெற்றிகள் தேவைப்படும். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 708 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த சூழலில் விராட் கோலியின் ஆரஞ்சு தொப்பிக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தற்போது பார்க்கலாம்.
அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் ருதுராஜ் தான் இருக்கிறார். இவர் 583 ரன்கள் அடித்திருக்கிறார்.இது விராட் கோலியை விட மிகவும் குறைவு என்றாலும், அடுத்த இடத்தில் இருப்பதால் இவருக்கு தான் அந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி பெற்றதன் மூலம் தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், விராட் கோலிக்கு தற்போது போட்டியே இல்லை.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் வீரர் ட்ராவிஸ் ஹெட் இருக்கிறார். டிராவிஸ் ஹெட் 533 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிகபட்சம் மூன்று கோட்டிகள் விளையாட முடியும். குறைந்தபட்சம் இரண்டு போட்டிகள் விளையாட முடியும். இதனால் இவருக்கு விராட் கோலியின் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் இருக்கிறார்.
இவர் 531 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருக்கும் அதிகபட்சம் 3 போட்டிகள் விளையாட வாய்ப்பு இருக்கிறது இதனால் விராட் கோலியின் தொப்பியை கைப்பற்ற இவருக்கும் சில வாய்ப்புகள் உள்ளன இந்த நிலையில் விராட் கோலிக்கும் அதிகபட்சமாக மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதில் விராட் கோலி நன்றாக ரன்கள் சேர்த்தால் அவருடைய ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற யாராலும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.