சென்னை: எந்த பணத்தாலும் எனது விஸ்வாசத்தை வாங்க முடியாது என்று சென்னை அணியின் இளம் நட்சத்திர வீரர் மதீஷா பதிரானா பதிவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உச்சரித்த பெயர் மதீஷா பதிரானாவாக தான் இருக்கும். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இன்னும் சொல்ல போனால் சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக உருவெடுத்துள்ளார் பதிரானா.

ஜூனியர் மலிங்காவாக பார்க்கப்படும் பதிரானாவை, சிஎஸ்கே கேப்டன் தோனியும் பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டது சென்னை அணி ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனால் சென்னை அணியின் நிரந்தர வீரராக பதிராணா இருக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது.
அதற்கு முன்பாக டிரேடிங் முறையில் வீரர்களை ஒப்பந்தம் செய்ய டிசம்பர் 12ஆம் தேதி வரை ஐபிஎல் நிர்வாக குழு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அணிகளும் டிரேடிங்கில் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி டிரேடிங்கில் ஒப்பந்தம் செய்தது.
இதற்கு குஜராத் அணி நிர்வாகத்துடன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடும், மும்பை அணியும் ஆஃபருமான காரணமாக பார்க்கப்பட்டது. ரோகித் சர்மாவுக்கு பின் கேப்டன்சி பொறுப்பு, விளம்பர ஒப்பந்தம் என்று மும்பை அணி தரப்பில் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் விதிகளின் படி, நேரடியாக எந்த அணி நிர்வாகமும் வீரர்களிடம் ஆலோசிக்க கூடாது.
ஆனால் ஐபிஎல் அணி தரப்பில் குஜராத் அணியின் முகமது ஷமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக குஜராத் அணியின் சிஓஓ அரவிந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பின்னணியில் மும்பை அணி நிர்வாகம் இருப்பதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை அணியின் பதிரானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த பணத்தாலும் என் விஸ்வாசத்தை விலைக்கு வாங்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
பதிரானாவின் இந்த பதிவு ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் அணிகள் தரப்பில் பதிரானாவை டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் காரணமாகவே பதிரானா இதுபோன்ற பதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.