லக்னோ : பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 30 பந்துகளில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டியது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. லக்னோ அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய க்ருனால் பாண்டியா 43 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களும் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தரப்பில் கேப்டன் ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் கூட்டணி களமிறங்கியது. லக்னோ அணி தரப்பில் முதல் ஓவரை தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் வீசினார். அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக் பவுலிங்கில் பேர்ஸ்டோவ் அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
தொடர்ந்து 3வது ஓவரை வீசிய சித்தார்த் பவுலிங்கில் ஷிகர் தவான் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி அடுத்த கியருக்கு மாறினார். இதன்பின் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து அதிரடியாக பவுண்டரியில் ரன்களை குவிக்க தொடங்கினார்கள். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை குவித்தது.
தொடர்ந்து ரவி பிஷ்னாய் வீசிய 8வது ஓவரில் அபாரமாக சிக்சரை விளாசி பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தனது அரைசதத்தை எட்டினார். 30 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரிகள் உட்பட அரைசதம் அடித்து மிரட்டினார். ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் அடிக்கும் 51வது அரைசதம் இதுவாகும். இதன் மூலமாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
ஷிகர் தவானின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா உற்சாகமாகியுள்ளார். வழக்கமாக சிவப்பு அல்லது வெள்ளை நிற ஆடைகளில் பஞ்சாப் அணி விளையாடும் போட்டியை பார்க்கும் பிரீத்தி ஜிந்தா, இம்முறை கறுப்பு நிற ஆடையுன் சோகமாக காணப்பட்டார். ஷிகர் தவானின் அதிரடியால் மீண்டும் பிரீத்தி ஜிந்தா உற்சாகமடைந்த வீடியோ சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகி வருகிறது.