மும்பை : குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா ட்ரேட் மூலம் மும்பை அணிக்கு இடம்பெயர்ந்ததன் காரணமாக 3 அணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும், ஒருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மறுபக்கம் மும்பை அணி தொடர்ச்சியாக 3 சீசன்களில் மோசமாக விளையாடியதால், ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் மூலமாக மீண்டும் மும்பை அணி வாங்கியது.

இந்த ட்ரேட் செய்வதற்காக ரூ.115 கோடி வரை மும்பை அணி நிர்வாகம் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதற்காக ரூ.17.5 கோடி கொடுத்து வாங்கப்பட்ட கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சிபி அணிக்கு ட்ரேட் செய்தது. அதேபோல் ஹர்திக் பாண்டியா வெளியேறியதால் குஜராத் அணி புதிய கேப்டனாக சுப்மன் கில்லை நியமனம் செய்தது.
ஹர்திக் பாண்டியாவின் இழப்பை சரிசெய்ய குஜராத் அணி நிர்வாகம் ஏலத்தில் ஒமர்சாய், ஷாரூக் கான் உள்ளிட்டோரை வாங்கியது. இதன் பின் 3 அணிகளும் வலிமை பெற்றதாக பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் இந்த 3 அணிகளும் மோசமாக செயல்பட்டு வருகின்றன. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மற்றும் பவுலிங் காரணமாக மும்பை அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

வான்கடே போன்ற பேட்டிங் பாரடைஸ் பிட்ச்களில் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் எடுபடாது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் குஜராத் அணிக்கு சுப்மன் கில் நல்ல கேப்டனாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் நிலைத்து நின்று விளையாட சரியான மாற்று வீரரை கண்டறிய முடியாமல் குஜராத் அணி நிர்வாகம் திண்டாடி வருகிறது.
அதேபோல் ஆர்சிபி அணி கேமரூன் க்ரீனை ரூ,.17.5 கோடிக்கு வாங்கி பெஞ்சில் அமர வைத்துள்ளது. மும்பை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட அவர், இதுவரை ஆர்சிபி அணிக்காக ஒரு போட்டியில் கூட சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இதனால் அம்பானி செய்த ஒரேயொரு சம்பவத்தால் ஐபிஎல் தொடரில் 3 நட்சத்திர அணிகள் திண்டாடி வருவதாக சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.