முல்லன்பூர் : அழுத்தம் நிறைந்த நேரத்திலும் அஷுதோஷ் சர்மாவின் பேட்டிங் அசத்தலாக இருந்ததாகவும், அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆவலாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் சிறந்த இளம் வீரராக பஞ்சாப் அணியின் அஷுதோஷ் சர்மா பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறிய நிலையில், இளம் வீரர் அஷுதோஷ் சர்மா களமிறங்கி 28 பந்துகளில் 61 ரன்களை விளாசி மும்பை அணி வீரர்களுக்கு பீதியை கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஷுதோஷ் சர்மா ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. அஷுதோஷ் சர்மாவின் சில சிக்சர்கள் அப்படியே சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்ப்பது போல் இருந்தது.
இந்த நிலையில் போட்டிக்கு பின் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், அற்புதமான இன்னிங்ஸ் ஒன்றை அஷுதோஷ் சர்மா விளையாடி இருக்கிறார். நிச்சயம் மைதானம் வந்த ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு இன்னிங்ஸாக அமைந்திருக்கும். இதுபோன்ற அழுத்தமான சூழல்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
நிச்சயம் 2 புள்ளிகளுடன் முல்லம்பூரில் இருந்து செல்வது மகிழ்ச்சி தான். இந்த வெற்றிப் பயணத்தை தொடர விரும்புகிறோம். இந்த ஆட்டத்தில் திலக் வர்மா களமிறங்கிய போது, என்னால் 7 முதல் 8 பந்துகள் வரை என்னால் ரன்களே சேர்க்க முடியவில்லை. ஏதோ கால்களில் ஸ்பிரிங் இருந்ததை போல் உணர்ந்தேன். அவர் தான் அதிரடியாக ரன்கள் சேர்த்து என்னை காப்பாற்றினார். இதுபோன்ற பிட்ச்களில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது எளிதல்ல.
வாழ்வின் சில இன்னிங்ஸ்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருக்கும். இந்த இன்னிங்ஸ் அப்படியான ஒன்று தான். இந்த பிட்ச் கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் களத்தில் பேட்டிங் செய்யும் போது கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன். இந்த அரைசதத்தை ஓய்வறையில் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.