முல்லன்பூர் : உலகின் தலைசிறந்த பவுலரான பும்ராவின் பந்தில் ஸ்வீப் ஷாட் மூலமாக சிக்சர் அடித்து மகிழ்ச்சியளிப்பதாக பஞ்சாப் அணியின் அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. பஞ்சாப் அணி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது இளம் வீரர் அஷுதோஷ் சர்மா களமிறங்கினார். கேமியோ இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஷுதோஷ் சர்மா மும்பை வீரர்களுக்கு பீதியை கொடுத்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதனால் மும்பை அணியின் சீனியர் வீரர்களான பும்ரா, ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இணைந்து ஆலோசனை நடத்தினர். அஷுதோஷ் சர்மாவை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியே மொத்தமாக திணறியது.
குறிப்பாக பும்ரா பவுலிங்கில் அஷுதோஷ் சர்மா ஸ்வீப் ஷாட் மூலமாக சிக்ஸ் அடித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முன் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே பும்ராவின் யார்க்கர் பந்தை கணித்து அசாதாரண சிக்ஸ் ஒன்றை விளாசி இருக்கிறார். வேறு எந்த பவுலரும் அவ்வளவு எளிதாக பும்ரா பந்தில் ஸ்வீப் சிக்ஸ் அடித்ததில்லை.
இதனால் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்டோரும் அஷுதோஷ் சர்மாவை பாராட்டினர். சிறப்பாக விளையாடிய அஷுதோஷ் சர்மா 28 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசினார். இந்த இன்னிங்ஸ் குறித்து அஷுதோஷ் சர்மா பேசுகையில், வேகப்பந்துவீச்சாளர் ஒருவரின் பந்தில் ஸ்வீப் ஷாட் மூலமாக சிக்ஸ் அடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இது உலகின் தலைசிறந்த பவுலரான பும்ராவுக்கு எதிராக வந்துள்ளது.
இதனால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி தான். இதுபோன்ற ஷாட்களை தொடர்ச்சியாக பயிற்சி செய்து வருகிறேன். அதனால் இதில் எந்த ஆச்சரியமும் தேவையில்லை. நான் களத்தில் இருந்த போது வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. சஞ்சய் பங்கர் சார் என்னிடம், நீ நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாடுகிறார். தொடர்ந்து அப்படியான ஷாட்களை ஆட வேண்டும் என்று கூறினார். என் மனதில் அது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.