முல்லன்பூர் : பஞ்சாப் அணியின் ரூசோவ் மற்றும் கேப்டன் சாம் கரண் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி மும்பை அணியின் பும்ரா அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் பஞ்சாப் அணி சார்பாக சாம் கரண் - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மிடில் ஆர்டர் வீரரான சாம் கரண், தொடக்க வீரராக வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மும்பை அணி தரப்பில் கோட்ஸி முதல் ஓவரை வீசினார். சாம் கரண் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தலாக தொடங்க, பிரப்சிம்ரன் சிங் சந்தித்த முதல் பந்திலேயே தவறான ஷாட்டை விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் ரூசோவ் களமிறக்கப்பட்டார். முதல் ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரை வீச பும்ரா அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் அவசரம் காட்டாமல் ஒரு ரன்னை எடுத்து மறுமுனைக்கு செல்ல, ரூசோவ் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது 4வது பந்தை பும்ரா தரமான யார்க்கராக வீச, அது ஃபுல் லெந்தில் பிட்சாகி ஸ்விங்காகியது.
இந்த பந்தை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் திணறிய ரூசோவ் போல்டாகி 1 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் அடுத்த பந்தில் ஒரு ரன்னை எடுத்து மறுமுனைக்கு சென்றார். இதையடுத்து கடைசி வந்த எதிர்கொள்ள கேப்டன் சாம் கரண் வந்தார். அந்த பந்தை கொஞ்சம் லெக் திசையில் பும்ரா வீச, அது சாம் கரணை கடந்து சென்றது. உடனடியாக நடுவர் ஒய்டு என்று அறிவித்தார்.
ஆனால் பும்ராவோ, விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் பேட்டில் பந்து அடித்த சத்தம் கேட்டதாக கேள்வி எழுப்பினார். மும்பை அணி வீரர்கள் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டாத சூழலில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் ரிவ்யூ எடுக்குமாறு பும்ரா கோரினார். அதன்பின் 3வது நடுவரின் அப்பீலுக்கு சென்ற போது, பும்ரா வீசிய பந்து சாம் கரணின் பேட்டில் அடித்து இஷான் கிஷன் கேட்ச் பிடித்தது தெரிய வந்தது.
இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் பஞ்சாப் அணியின் 2 முக்கிய பேட்ஸ்மேன்களை பும்ரா வீழ்த்தியதால், பஞ்சாப் அணி 2 ஓவர்கள் முடிவில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த ஐபிஎல் தொடரில் பும்ரா 7வது போட்டியில் விளையாடி வரும் சூழலில், 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி பர்பிள் கேப் ரேசில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.