முல்லன்பூர் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்சல் படேல் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரண் - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் பந்திலேயே சாம் கரண் பவுண்டரியுடன் தொடங்கினாலும், 3வது பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து பும்ரா வீசிய 2வது ஓவரில் ரூசோவ் டக் அவுட்டாகியும், சாம் கரண் 6 ரன்களில் ஆட்டமிழக்க, கோட்ஸி வீசிய 3வது ஓவரில் லிவிங்ஸ்டன் 1 ரன்னில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் இம்பேக்ட் பிளேயராக ஹர்ப்ரீத் சிங் பாட்டியா களமிறங்கினார். இவரும் ஷஷாங்க் சிங்கும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோட்ஸி மற்றும் பும்ரா அட்டாக்கில் இருந்து வெளியேறிய பின் ஆகாஷ் மத்வால் அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரில் ஷஷாங்க் சிங் 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் சேர்க்க, பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் 40 ரன்கள் சேர்த்திருந்தது.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் கோபால் பவுலிங்கில் ஹர்ப்ரீத் சிங் பரார் 13 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் ஜித்தேஷ் சர்மா களமிறங்கினார். தொடர்ந்து ஷஷாங்க் சிங் அதிரடியாக அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாச, மறுமுனையில் நின்றிருந்த ஜித்தேஷ் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா கூட்டணி இணைந்து அதிரடியில் பொளந்து கட்டியது.
அஷுதோஷ் சர்மா சந்தித்த 2வது பந்திலேயே சிக்ஸ் அடிக்க, ரொமாரியோ ஷெப்பர்ட் பவுலிங்கில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். பின்னர் ஹர்திக் பாண்டியா பவுலிங்கிலும் ஒரு சிக்ஸ் அடிக்க, பஞ்சாப் அணியின் ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் சேர்த்திருந்தது. ஆட்டம் கையை விட்டு விலகுவதை அறிந்த ஹர்திக் பாண்டியா உடனடியாக பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்தார். பும்ரா வீசிய முதல் பந்திலேயே ஷஷாங்க் சிங் 41 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்ப்ரீத் சிங் பரார் களமிறங்கினார்.
இதன்பின் ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் அஷுதோஷ் சர்மா எடுத்து கொண்டார். பும்ரா வீசிய ஒரு பந்திலேயே அசத்தலாக ஸ்வீப் ஷாட் மூலமாக சிக்ஸ் அடுத்த அஷுதோஷ் சர்மா, கோட்ஸி வீசிய 15வது ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசப்பட்டது. பின்னர் ஆகாஷ் மத்வால் வீசிய 16வது ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 24 ரன்கள் சேர்க்கப்பட, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 28 ரன்கள் தேவையாக இருந்தது.
அப்போது கோட்ஸி பவுலிங்கில் சிறப்பாக ஆடிய அஷுதோஷ் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. மும்பை அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவையாக இருந்தது. இந்த சூழலில் ஆகாஷ் மத்வால் பவுலிங் செய்ய வந்தார். இந்த ஓவரின் 2வது பந்தில் ரபாடா 2வது ரன் ஓடும் முயற்சியில் ரன் அவுட்டாகினார். இதனால் பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது.