தரம்சாலா : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ட்ரைக் ரேட் மீது ஒரு கண் வைத்திருந்ததாக ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 47 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனங்கள் அதிகரித்திருந்த நிலையில், இந்த போட்டியில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆரஞ்ச் கேப் ரேசில் யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு விராட் கோலி சென்றுள்ளார். அதேபோல் 2வது முறையாக சதத்தை எட்ட முடியாமல் விராட் கோலி 90 ரன்களுக்கு மேல் குவித்து ஐபிஎல் தொடரில் ஆட்டமிழந்திருக்கிறார். அதேபோல் ஸ்பின்னர்களை விராட் கோலி வெளுத்து கட்டியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த இன்னிங்ஸ் குறித்து விராட் கோலி பேசுகையில், ஸ்ட்ரைக் ரேட்டை சீராக உச்சத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த பிட்சில் நானும் டூ பிளசிஸ்-ம் இணைந்து பேட்டிங் செய்த போது, வேகத்தை குறைத்ததால் என்ன நடந்தது என்று அறிந்து கொண்டோம். ஒரு பக்கம் நல்ல வேகத்திலும், பிட்சின் மற்றொரு புறம் ஸ்லோயர் பந்துகளும் நன்றாக எடுபடுகின்றன.
பேட்டிங்கின் போது 230 ரன்கள் எடுத்தால் சமாளிக்க முடியும் என்று கணித்திருந்தோம். அதுமட்டுமே எங்களின் மனநிலையாக இருந்தது. கடைசி ஓவரில் ஹர்சல் படேல் மிரட்டிவிட்டார் என்றே சொல்லலாம். அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை விடவில்லை என்றால், நிச்சயம் 250 ரன்களுக்கு மேல் குவித்திருக்க முடியும். காவேரப்பா போன்ற வீரர்களின் திறமையை ஒரே போட்டியை மட்டுமே வைத்து சொல்லிவிட முடியாது.
அவரின் கைகளில் இருந்து பந்து வரும் போது நன்றாக ஸ்விங்காகிறது. இந்த இன்னிங்ஸில் காவேரப்பா பவுலிங்கின் போது முதல் 3 ஓவர்களில் நன்றாக ஸ்விங் செய்தார். ஆனால் அவரின் 4வது ஓவரை எங்களால் அட்டாக் செய்ய முடிந்தது. ஏனென்றால் பிட்சில் அதன்பின் ஸ்விங் இருக்காது என்று தெரியும் என்று தெரிவித்துள்ளார்.