தரம்சாலா : ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது விரக்தியாகவும் ஏமாற்றமாகவும் இருப்பதாக பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்களை விளாசினார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரைலி ரூசோவ் 27 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். அதேபோல் ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பவ்னில் சிங், ஃபெர்குசன் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆர்சிபி அணி 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறியுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளை வென்றாலும் பஞ்சாப் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பேசுகையில், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது விரக்தியாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது. இந்த போட்டியிலும் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் நடந்தன.
ஆனால் வெற்றிபெறும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. அதுவும் தேவையான நேரத்தில் வெல்ல முடியவில்லை. கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியதால் எந்த கவனச் சிதைவும் இல்லை. ஏனென்றால் பஞ்சாப் அணி சிறந்த அணியாக உள்ளது. அதனால் எனது அணியை வழிநடத்துவது நம்பிக்கையாகவும் இருந்தது. நிச்சயம் அடுத்த சீசனில் கூடுதல் பலத்துடன் வர வேண்டும். நிச்சயம் பஞ்சாப் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் இன்னும் சில போட்டிகளை வென்றிருந்தால், மகிழ்ந்திருப்பேன். இந்த சீசனில் சில போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டோம். சேஸிங்கில் வரலாறு படைத்தோம். ஐபிஎல் தொடரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது. பஞ்சாப் அணியின் ஓய்வறையில் ஏராளமான அனுபவங்கள் உள்ளது. அதன் வாயிலாக கற்க வேண்டும். ஏமாற்றங்கள் இருந்தாலும், தொடர்ந்து போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.