தரம்சாலா : ஐபிஎல் தொடரில் அதிக முறை 600 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேஎல் ராகுலின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 241 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முதன்மை காரணமாக விராட் கோலி அமைந்துள்ளார். இந்த போட்டியில் விராட் கோலி 46 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலமாக இந்த ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதுவரை 12 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 634 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக ஆரஞ்ச் கேப் ரேசில் விராட் கோலி முதலிடத்திலேயே தொடர்கிறார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விராட் கோலி முக்கிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் ஒரே சீசனில் அடித்த வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுல் முதலிடத்தில் இருந்தார். ஐபிஎல் தொடரில் 4 முறை கேஎல் ராகுல் 600 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். அந்த சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2013ஆம் ஆண்டு விராட் கோலி 634 ரன்களையும், 2016ஆம் ஆண்டு 973 ரன்களையும், 2023ஆம் ஆண்டு 639 ரன்களையும் விளாசி இருக்கிறார்.
இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தலா 3 முறை 600 ரன்களுக்கு மேல் விளாசி இரண்டாவது இடத்திலும், ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 2 முறை 600 ரன்களுக்கு மேல் விளாசி 3வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.